பினாங்கு, ஜன.3-
வருகிற தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பினாங்கு நாட்டுக் கோட்டை செட்டியார்கள் நடத்திய 11 தினங்கள் அபிஷேக பிராத்தனை, 11 ஆம் நாள் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
127 ஆம் ஆண்டின் நிகழ்ச்சியாக நேற்று ஜனவரி 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணிக்கு பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோயில் வீட்டிலிருந்து அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு, டத்தோ கிராமட் ரோடு நகரத்தார் சிவன் கோயில் வந்து சேர்ந்தது.
பூஜை, தரிசனம் கொடுத்து பின்னர் மீண்டும் நகர் ஊர்வலமாக பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் வீடு வந்து சேர்ந்தது.
பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு வெள்ளி குதிரை வாகனத்தில் ஸ்ரீ மகாமாரியம்மன் அலங்கார பவனி வருவதைக் கண்டு பேரானந்தம் பெற்றனர்.
இந்நிகழ்வில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் அறங்காவலர்களுடன் , பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் உட்பட அறப்பணி வாரியத்தின் இதர ஆணையர்கள் கலந்து சிறப்பித்தனர்.