ஜோகூர் பாரு, மார்ச் 2 –
நேற்று வெள்ளிக்கிழமை, ஜாலான் ஜோகூர் பாரு அயேர் ஹித்தாம் சாலையின் 9 ஆவது கிலோமீட்டரில் எதிர்திசையை நோக்கி ஹொன்டா சீவிக் காரை செலுத்திய மூதாட்டி ஒருவர், டெமென்சியா எனும் ஞாபக மறதி நோயினால் அவதியுற்று வருபவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
75 வயதுடைய அந்த மூதாட்டியின் கார், போலீஸ்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, இஸ்கன்டார் புத்ரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது அந்த மூதாட்டி,ஞாபக மறதி நோயினால் அவதியுற்று வருவது தெரியவந்துள்ளதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி பல்வெர் சிங் மஹிம்டர் சிங் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மூதாட்டி, எதிர்திசையை நோக்கி, வாகனத்தை செலுத்தும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த காரை போலீசார் அடையாளம் கண்டதாக அவர் மேலும் கூறினார்.
நள்ளிரவு 12 மணிக்கும் விடியற்காலை 2.20 மணிக்கும் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போது அந்த மூதாட்டி மது அருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.சி.பி பெல்வர் குறிப்பிட்டார்.