போலீஸ்காரர் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகும் அளவிற்கு தங்களின் காரில் வேண்டுமென்றே இரண்டு முறை மோதி தள்ளிவிட்டு, தப்பிச் சென்றதாக கூறப்படும் ஓர் இந்திய ஆடவரும் பெண்ணும் பிடிபட்டனர்.
பேரா, செமூர் , தஞ்சோங் ரம்புத்தான் சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் தீவிரமாக தேடப்பட்டு வந்த புரோட்டான் ஐரிஸ் ரக வாகனத்தை செலுத்திய 33 வயது ஆணும், அவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் 34 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டு, இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்தப் பெண்ணையும், ஆணையும் 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் மிஸ் நோரா ஷெரீப் அனுமதி அளித்தார்.
சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு 7.30 மணியளவில் தஞ்சோங் ரம்புத்தான் சாலையில் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 34 போலீஸ்காரர் சம்பந்தப்பட்ட காரினால் மோதப்பட்டு விலா எழும்பு முறிந்து, தப்போது ஈப்போ Raja Permaisuru Bainun மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த தம்பதியரின் காரை தடுத்து நிறுத்த அந்த போலீஸ்காரர் முயற்சித்த போது, அவரின் மோட்டார் சைக்கிளை தங்கள் காரினால் வேண்டுமென்றே மோதித் தள்ளியதாகவும், அந்த போலீஸ்காரர் கீழே விழுந்த போது, மீண்டும் காரை பின்னோக்கி செலுத்தி அவரை இரண்டாவது முறையாக மோதித்தள்ளியதாகவும் அந்த ஜோடியினருக்கு எதிராக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.