தனது உறவுக்கார குழந்தையை சித்ரவதை செய்து கொன்றதாக லோரி ஓட்டுநர் ஒருவர் , பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
28 வயது எம். கேசிங்கன் என்ற அந்த லோரி ஓட்டுநர், மாஜிஸ்திரேட் ஃபரா அஸுரா முகமது சாத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 24 ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் சுபாங், லெம்பா சுபாங், தாமான் புத்ரா டாமாய், பி.பி.ஆர் அடுக்கு மாடி வீட்டில் தி. ஹுதேஷ் என்ற 18 மாத ஆண்குழந்தையை கொன்றதாக எம். கேசிங்கனுக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
வேலைக்கு சென்ற பெற்றோர், தங்களின் பராமரிப்பில் விட்டு சென்ற அவர்களின் 18 மாத குழந்தையை கணவன், மனைவி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த அன்று சுயநினைவு இழந்து, கவலைக்கிடமாக கிடந்த அக்குழந்தை ஷா ஆலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
குழந்தையின் உடல் உறுப்புகள் செயலிழக்கும் அளவிற்கு அந்த குழந்தையை அவர்கள் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்குழந்தையின் மரணம் தொடர்பில் கேசிங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு விசாரணை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கேசிங்கனிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.