கோலாலம்பூர், மார்ச் 5 –
இஸ்லாத்தின் உயர்வு தற்காக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் மலாய் ஆட்சியாளர்களை மறைமுகமாக நிந்திக்கும் தன்மையில் அறிக்கை வெளியிட்டதாக கூறப்படும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கிடம் போலீசார் இன்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணை இன்று பிற்பகல் 2.20 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவுட் Jalan Raja Laut- டில் உள்ள பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. புக்கிட் அமானைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள், ஹாடி அவாங்கிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என்று அந்த மாராங் எம்.பி.யின் அரசியல் செயலாளர் மொகாமாட் ஷாஹிர் ஷெ சுலாய்மான் தெரிவித்தார்.
ஒரு மணி நேர விசாரணையின் போது, ஹாடி அவாங் முழு ஒத்துழைப்பை நல்கியதாக அவர் மேலும் கூறினார்.