ஈப்போ, மார்ச் 1 –
மற்ற வாகனங்களுங்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அம்புலன்ஸ் வண்டியை பின் தொடர்ந்து சென்ற வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கின் அதிகாரத்துவ வாகனம் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் மொகமட் யுஸ்ரி ஹாசான் தெரிவித்துள்ளார்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பாவிற்கு அருகில் அம்புலன்ஸ் வண்டியை பின்தொடர்ந்து சென்ற அமைச்சர் ங்கா கொர் மிங் கின் அதிகாரத்துவ வாகனம் தொடர்பான காணொளி ஒன்று கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த வாகனத்தின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கேட்டுக்கொண்டார்.
அந்த வாகனத்தின் உரிமையாளர் தாம் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அமைச்சர் ங்கா கொர் மிங் , போலீசார் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ள தயார் என்று அறிவித்து இருந்தார்.
எனினும் இவ்விவகாரம் நீதிமன்றத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் செலுத்தப்பட்டு விட்டதால் இதற்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக மொகமட் யுஸ்ரி ஹாசான் விளக்கம் அளித்துள்ளார். .