தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை சபா, சராவாவின் கூட்டு முயற்சியுடன் கவிழ்த்துவிட முடியும் என்று மனப்பால் குடிக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட தரப்பினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.
சரவா மாநிலத்தில் ஜி.பி.எஸ் கூட்டணி மற்றும் சபாவில் ஜி.ஆர்.எஸ் கூட்டணி ஆகியவற்றின் உதவியுடன் தமது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முயற்சியில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான முயற்சியில் குறிப்பிட்ட தரப்பினர் ஈடுபட்டு இருப்பதை சரவா முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓபேங் தம்மிடம் தெரிவித்து இருப்பதையும் பிரதமர் அன்வார் அம்பலப்படுத்தினார்.
அபாங் ஜோஹாரி ஓபேங் தலைமையிலான சரவா ஜி.பி.எஸ் கூட்டணி, ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பேரம் பேசப்பட்டுள்ளது. எனினும் அந்த பேரத்தை சரவா மு தலமைச்சர் முற்றாக நிராகரித்து விட்டார் என்பதையும் பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார். .
மத்திய அரசாங்கத்திற்கும், சரவா மாநிலத்திற்கும் .இடையிலான நல்லுறவை துண்டித்துக்கொள்வதற்கு விருப்பமில்லை என்று சரவா முதலமைச்சர் தெளிவுபடுத்தி விட்டதையும் பிரதமர் அன்வார் விளக்கினார்.
.இதேபோன்று சபா மாநிலத்தின் ஜி.ஆர்.எஸ் கூட்டணிக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் அந்த கூட்டணி நிராகரித்து விட்டதாக அன்வார் தெரிவித்தார்.