கூலிம், பிப்ரவரி 28 –
கூலிம், பாடாங் செராய், தாமான் டாமாய் யில் உள்ள காபி கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் ஆடவர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து 31 வயதுடைய சந்தேகிக்கும் விவசாயத் தொழிலாளி நேற்று பிற்பகல் 1 மணியளவில் கூலிம் மருத்துவமனைக்கு அருகில் கைது செய்யப்பட்டதாக கூலிம் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் சபுவான் மொஹாமாட் னோர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், 27 வயதுடைய அந்த லாரி ஓட்டுநரை தாக்கியதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்நபர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்று சபுவான் மொஹாமாட் கூறினார்.
சம்பந்தப்பட்ட உணவு கடையின் முன்புறத்தில் இருந்தபோது பாதிக்கப்பட்டவரை ஒருவர் கத்தியால் சரமாரியாக வெட்டியதாகவும் பின்பு நண்பர் ஒருவரால் அந்நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக சபுவான் மொஹாமாட் ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.
இந்த தாக்குதல் பழிவாங்கும் நோக்கத்தில் நடந்திருக்கலாம் என்று அவரது தரப்பு நம்புவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகிக்கும் நபர் இன்று வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று சபுவான் மொஹாமாட் அறிவித்தார்.