காஜாங், மார்ச் 25.
கட்டுமான மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்றின் இயக்குநரை பிணைப்பணம் கோரி, கடத்தியதாக கணவன், மனைவி உட்பட ஐவர், காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
32 வயது வோங் சின் சியான், அவரின் 33 வயது மனைவி கொஹ் சியாஹ் யிங், 24 வயது அங் சி தெங், 25 வயது வோங் சுன் வெங் மற்றும் 28 வயது ஒங் கிம் யாவு என்ற அந்த ஐவரும் மாஜிஸ்திரேட் நிக் சிட்டி நோரஸுநி நிக் மொஹமட் பாய்ஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்த ஐவரும் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் காஜாங், டாத்தாரான் ஜேட் என்ற வர்த்தக வளாகத்தில் 37 வயது நிறுவன இயக்குநரை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய படசம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 34 ஆவது பிரிவின் கீழ் ஐவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.