வரும் ஜனவரி 25 ஆம் தேதி பத்துமலைத் தைப்பூச விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துவதற்கு பத்துமலை திருத்தல வளாகத்தில் இரண்டு நாட்களுக்கு மாபெரும் கலை நிகழ்ச்சி படைக்கப்படும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
தைப்பூச முதல் நாளான ஜனவரி 24 ஆம் தேதி புதன்கிழமையும், தைப்பூச உற்சவத் திருநாளான ஜனவரி 25 ஆம் தேதி வியாழக்கிழமையும், இரவு 8.00 மணிக்கு மாபெரும் காலை விழா நடைபெறும் என்று டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.
முற்றிலும் பக்தி இசை நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த மாபெரும் கலை விழாவில் தமிழ்நாட்டிலிருந்து பிரபல பாடகர்களான செந்தில் தாஸ், மகாலிங்கம், பாடகி கலைமாமணி மாலதி லக்ஷமண் மற்றும் பக்கவாத்திய கலைஞர்கள் பங்கு கொள்ளவிருக்கின்றனர் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
இரண்டு நாள் நடைபெறும் இந்த மாபெரும் கலை விழாவில் மக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வினை கண்டு களிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டுள்ளார்.