பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 13-
கிளந்தான், திரெங்கானு மாநிலங்களுக்கான கோடிக்கணக்கான வெள்ளி எண்ணெய் உரிமம் பணம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது தலைமையிலான PKR கட்சியின் வங்கி கணக்கிற்கு மடை மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுவதை அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் பாஹ்மி பட்ஜில் மறுத்துள்ளார்.
PKR வங்கி கணக்கு அறிக்கைகள் அனைத்தும் சான்றிதழ் பெற்ற நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனத்தினால் தணிக்கை செய்யப்பட்டு, கட்சியின் ஒவ்வொரு மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்படுகிறன என்று பாஹ்மி பட்ஜில் விளக்கினார்.
PKR கட்சி மற்றும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக மிக மோசமான, தவறான, அவதூறான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதாக தொடர்புத்துறை அமைச்சரான பாஹ்மி பட்ஜில் குறிப்பிட்டார்.
இரு மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமம் பணம், PKR வங்கிக் கணக்கிற்கு மடை மாற்றம் செய்யப்பட்டது போன்ற எந்தவொரு தொகையையும் அறிக்கையில் காண முடியவில்லை.
இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டாகும். இந்த பொய் குற்றச்சாட்டை கட்டவிழ்த்து விட்டு இருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்படும் என்று இன்று தனது முகநூலில் பாஹ்மி பட்ஜில் விளக்கம் அளித்துள்ளார்.