நாட்டில் உள்ள ஊடக சுதந்திரம் சிறார்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்கு மிரட்டலாக இருக்கக்கூடாது என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர் தியோ நீய் சிங் கேட்டுக்கொண்டார். அண்மையில் குற்றம் நிகழ்ந்ததாக கூறி, சிறார் ஒருவரின் புகைப்படங்கள் மற்றும் பிற அடையாள விவரங்கள் செய்தியில் இடம் பெற்றிருந்ததாக துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பது தமது வாக்குறுதியாக இருப்பினும் சிறார்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதன் அவசியம் எப்போதுமே சமநிலையில் இருக்க வேண்டும் என்று தமது முகநூல் பதிவில் தியோ நீய் சிங் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் சிறார்களைப் பற்றி வெளியிடப்படும் செய்தி அறிக்கையால் அவர்களுக்கு அபாயம் நிகழாமல் இருக்க நடப்பில் இருக்கும் 2001 ஆம் ஆண்டு சிறார் நலச் சட்டத்தின் 15 ஆவது பிரிவின் கீழ் உள்ள சட்டத்திட்டங்களை நினைவில் கொள்ளுமாறு ஊடகவியலாளர்களை துணை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
சிறார்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சந்தேகிக்கப்படும் அவர்கள் சம்பந்தப்பட்ட ஊடக அறிக்கைகளில் சிறார்களின் அடையாள விவரங்களை வெளியிடவோ அல்லது உள்ளடக்கவோ கூடாது என்று துணை அமைச்சர் தியோ தெளிவுபடுத்தினார்.