கோலாலம்பூர், பிப்ரவரி 26 –
நாடு மற்றும் மக்களின் வளர்ச்சிக்கு முன்னெடுக்கும் திட்டங்களை காட்டிலும் தங்களின் மேதாவித்தனத்தையும், அடவாடித்தனத்தையும் காட்டுவதற்கு மாண்புக்குரிய நாடாளுமன்ற அவையை, ஒரு களமாக பயன்படுத்த முயற்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குவதற்கும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் நாடாளுமன்ற சபா நாயகருக்கு அதிகாரத்துடன் கூடிய லைசென்ஸுவை தாம் வழங்குவதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும், முன்னுதாரணத்தையும் காட்டும் மக்கள் பிரதிநிதிகள் வீற்றிருக்கும் தளம்தான் நாடாளுமன்றமாகும்.
மதிப்புக்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரிய நாடாளுமன்ற அவையை தங்களின் அடாவடித்தனத்தையும், ஒழுக்க குறைபாடுகளையும் காட்ட முயற்சிக்கும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் சபா நாயகர் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்தில் சில எம்.பி.க்களின் செயல்களினால் மாண்புக்குரிய அவையில் நுழைவதற்கே தமக்கு வெட்கமாக இருப்பதாக மான்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
கண்ணியத்திற்கும், மாண்புக்கும், போற்றுதலுக்கும் உரிய ஒவ்வொரு எம்.பி.யின் செயலும் மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்று இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறிய போது, எம்.பி.க்கள் பலர், மேஜையை தட்டி, மாமன்னரின் உரையை வரவேற்றனர்.