ஈப்போ, பிப்ரவரி 23 –
நாட்டில் உணவிற்கு பாடுப்படும் மற்றும் தங்கயிடமின்றி பொது இடங்களில் உறங்கும் ஏழை மக்கள் இருக்கும் வரையில் கோடி கணக்கான பணத்தை செலவிட்டு உயரமான கட்டிடங்கள் கட்டினாலும் அது பயனற்றது என்று பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா தெரிவித்தார்.
ஏழை மக்கள் இருக்கும் வரையில் வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் சமூக நலனை இலக்காக கொண்டு செயல்படகூடியதாக இருப்பது அவசியம் என்று சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார்.
2030 ஆம் ஆண்டில் வறுமையை முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் பிரதான திட்டத்தில் ஒன்று. ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்கும் வகையில் பேரா மாநிலத்தின் தொகையை நியாயமான முறையில் விநியோகிப்பதுதான் முக்கிய குறிக்கோளாக உள்ளது என்று சுல்தான் நஸ்ரின் ஷா அறிவித்தார்.
வறுமையை ஒழிப்பதற்கு எதிர்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வருமானத்தை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதாக இல்லாமல் மக்களின் நல்வாழ்வினை கருத்தில் எடுத்து பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று பேராக் டாருல் ரிட்சுவான் கட்டிடத்தில் நடைபெற்ற 15 ஆவது பேராக் மாநில சட்டமன்ற மாநாட்டின் இரண்டாம் ஆண்டு அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் சுல்தான் நஸ்ரின் ஷா இவ்வாறு வலியுறுத்தினார்.