பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 23 –
ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பாது பாது பூதெ தீவு உட்பட மூன்று தீவுகளின் இறையாண்மை தொடர்பான சர்ச்சையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையத்தின் விசாரணையில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது ஆஜராகத் தவறுவாரேயானால் அவரை கைது செய்வதற்கு பிடிவாரண்டு பிறப்பிக்க முடியும் என்று சட்ட வல்லுநர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அரச விசாரணை ஆணையத்தில் இடம் பெற்றுள்ள தலைவர் உட்பட இதர உறுப்பினர்கள் அனைவரும் மாமன்னரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், அந்த விசாரணையிலிருந்து துன் மகாதீர் தன்னை விடுவித்துக்கொள்ளவோ, அல்லது ஆஜராகுவதை தவிர்க்க சாக்குப் போக்கு கூறவோ முடியாது என்று பிரபல வழக்கறிஞர் ஸ்.ன் நாயர் தெரிவித்தார்.
அரச விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி துன் ரௌஸ் ஷாரிப் அந்த விசாரணை ஆணையத்திற்கு தொடர்ந்து தலைமையேற்பார் என்றால் அந்த விசாரணையில் துன் மகாதீர் ஆஜராக மாட்டார் என்று அவரின் வழக்கறிஞர் அறிவித்து இருப்பது தொடர்பில் வழக்கறிஞர் ஸ்.ன் நாயர் கருத்துரைத்தார்.
அரச விசாரணை ஆணைய சட்டம் 8 ஆவது பிரிவின் கீழ் அந்த விசாரணை ஆணையம், தனது விசாரணைக்கு யாரை வேண்டுமானாலும் அழைப்பதற்கான பிரத்தியேக அதிகாரத்தை கொண்டு இருப்பதை ஸ்.ன் நாயர் சுட்டிக்காட்டினார்.
எனவே விசாரணைக்கு துன் மகாதீர் அழைக்கப்படும் பட்சத்தில் அதிலிருந்து அவர் தப்பிக்க முற்பட்டால் அவருக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று ஸ்.ன் நாயர் எச்சரித்தார்.