ஷாஹ் அலாம், ஏப்ரல் 25-
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரைகளில் களமிறங்க மறுத்துள்ள ம.சீ.ச கட்சி, ஒற்றுமை அரசாங்கத்தில் அதன் நிலை குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென UMNO உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லோக்மன் நூர் அடாம் வலியுறுத்தினார்.
வருகின்ற மே மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் அத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை ஆதரித்து ஓரணியில் செயல்படுவதற்கு தேசிய முன்னணி இணக்கம் தெரிவித்துள்ளது. அவ்வகையில், தாங்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டுமென ம.சீ.ச -வும் கருதுமானால், ஒற்றுமை அரசாங்கத்தை வலுப்படுத்துவதில் அவர்களுக்கான பங்களிப்பை வழங்க வேண்டும்.
அதில் விருப்பம் இல்லை என்றால், அந்நிலைப்பாட்டை கூறிவிட்டு, தங்களுக்கு விருப்பமான தரப்பினருடன் அவர்கள் இணைந்துக்கொள்ளலாம். DAP மீது அதிருப்திகளைக் கொண்டிருந்தாலும்கூட, ம.சீ.ச எளிதில் விமர்சனங்களால் ஆட்டம் காணுவது சரியில்லை எனவும் லோக்மன் அடாம் கூறினார்.
இதற்கு முன்பு, தங்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை DAP கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் முன்வைத்துள்ளதால், வருகின்ற கோல குபு பாரு இடைத்தேர்தலை புறக்கணிக்க போவதாக ம.சீ.ச கட்சி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறியிருந்தார்.