லுமுட் அருகில் செகாரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டு இருந்த பதின்ம வயதுடைய மூன்று இந்திய இளைஞர்கள் நீரில் மூழ்கிய சம்பவத்தில் இதுவரையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய இருவரை தேடும் பணியை தீயணைப்பு, மீட்புப்படையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3.26 மணியளவில் கம்போங் தஞ்சோங் பத்து செகாரி சுங்ஙாய் செம்பிட் ஆற்றில் அந்த மூன்று இந்திய இளைஞர்கள் மீன்பிடித்துக்கொண்டும் குளித்துக்கொண்டும் இருந்த போது நீரின் வேகத்தில் மூவரும் அடித்துச் செல்லப்பட்டதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க அதிகாரி முஹமாட் ஹபாஃபி முஹமாட் ரசிடி தெரிவித்தார்.
14 வயது தர்மராஜ் , 16 வயது ஜி. சரத் மற்றும் 16 வயது தி. ஈஸ்வர் பிள்ளை ஆகிய மூவர் நீரில் மூழ்கியதாக அடையாளம் கூறப்பட்டுள்ளது.
அந்த மூவரை தேடும் பணி தீவிரப்படுத்தியதில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.05 மணியளவில் தர்மராஜ் உடல் மீட்கப்பட்டது. அவர் நீரில் மூழ்கிய இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நீரில் உடல் மிதக்க காணப்பட்டது..
காணாமல் போன மேலும் இருவரான சரத் மற்றும் ஈஸ்வர் பிள்ளை ஆகியோரை தேடும்பணியில் தீயணைப்பு, மீட்புப்படையினருடன் இணைந்து பொது தற்காப்பு படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.