சிரம்பான்,பிப்.12
நெகிரி செம்பிலான், கம்போங் பாரு நிலாய்யில் நேற்று மாலை 6.20 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் இரண்டு வீடுகள், இரண்டு கார்கள், ஒரு டிரெக்டர் மற்றும் ஒரு கோயில் கடுமையாக சேதமடைந்ததாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் இரண்டு வீடுகளும் 80 விழுக்காடு அழிந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக உயிருடன் சேதம் இல்லை என்றும் நீலாய் தீயணைப்பு நிலைய அதிகாரி பக்கார்யா முஹமாட் சாலெ தெரிவித்தார்.
அவசர தகவலைப் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்த 14 தீயணைப்பு வீரர்கள், தீ மற்ற வீடுகளில் பரவாமல் சுமார் 35 நிமிடத்தில் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறினார்.