கோத்தா கினாபாலு, ஏப்ரல் 17-
கோத்தா கினாபாலு, ஜாலான் ஹாஜி சாமான்-னில் உள்ள ஒரு பேரங்காடியின் கழிவறையில் பெண் ஒருவரை ஆபாசமாக காணொளி எடுத்ததற்காக ஆடவர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 3.34 மணியளவில் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய பெண்ணிடமிருந்து புகார் பெறப்பட்டதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது சய்டி அப்துல்லா கூறினார்.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு 8.40 மணியளவில் குறிப்பிடப்பட்ட கழிவறை கதவின் கீழ் அடையாளம் தெரியாத அவ்வாடவர் தொலைப்பேசியை வைத்திருப்பது அப்பெண் கண்டறிந்ததாக முகமது சய்டி தெரிவித்தார்.
அவ்விடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசமாக புகைப்படம் அல்லது காணொளி எடுப்பதை மட்டுமே சந்தேகிக்கும் அவ்வாடவர் இலக்காக கொண்டிருந்ததாக முகமது சய்டி ஓர் அறிக்கையில் இன்று குறிப்பிட்டார்.
சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது அவ்வாடவர் கருப்பு நிற ஆடை மற்றும் சாக்லெட் நிற கால்சட்டையை அணிந்திருந்ததாகவும் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 509 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.