சிபு, ஏப்ரல் 17-
மாற்றான் மனைவியுடன் கள்ள உறவில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் அந்த மாதுவின் கணவரால் நையபுடைக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 10.29 மணியளவில் பாதிக்கப்பட்ட 24 வயதுடைய நபரிடமிருந்து போலீஸ் புகார் கிடைக்கப் பெற்றதாக சிபு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சுல்கிப்லி சுஹைலி தெரிவித்தார்.
அதே நாள் மாலை 5 மணியளவில் சிபு, ஜாலான் பஹ்லாவான்-னில் பாதிக்கப்பட்ட நபர் பேருந்திற்காக காத்திருந்த போது அவரின் காதலின் கணவர் உட்பட அடையாளம் தெரியாத இன்னும் மூன்று நபர்கள் அவரை தாக்கியதாக சுல்கிப்லி சுஹைலி கூறினார்.
மேலும், அந்நபர் வலுக்கட்டாயமாக கார் ஒன்றில் ஏற்றப்பட்டு ஜாலான் செந்தோசா-வில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சுல்கிப்லி சுஹைலி ஓர் அறிக்கையில் அறிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 26 வயதான அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சுல்கிப்லி சுஹைலி குறிப்பிட்டார்.