- வான்போக்குவரத்து நிபுணர் நம்பிக்கை
கோலாலம்பூர், மார்ச் 7 –
மலேசிய தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் ஸிற்கு சொந்தமான MH 370 விமானம் காணாமல் போன துயரச் சம்பவம் நிகழ்ந்து நாளை மார்ச் 8 ஆம் தேதியுடன் சரியாக 10 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
MH 370 விமானம் என்னவானது, அதில் பயணித்த 12 சிப்பந்திகளுடன் 239 பேரின் நிலை என்னவானது என்பது தொடர்பான மர்மம் நீடித்து வரும் வேளையில் அந்த விமானத்தின் தலைவிதி என்னவானது என்பது குறித்து விடை காண முடியும் என்று கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தின் வான்போக்குவரத்து தொழில்நுட்ப ஆய்வியல் பிரிவின் தலைமை பேராசிரியர் டாக்டர் மொகமாட் ஹரிடொன் சுப்யான் கூறுகிறார்.
பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதற்காக காணாமல் போன ஒரு பொருள் கிடைக்காது என்று எளிதில் முடிவுக்கு வந்து விட முடியாது. அந்த விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து சரியான விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக பேராசிரியர் டாக்டர் மொகமாட் ஹரிடொன் சுப்யான் தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி புறப்பட்ட அந்த விமானத்தின் தேடல் தொடர்பாக முயற்சிகள் கைவிடப்பட்டது ஒரு பின்னடைவு என்றாலும் அந்த விமானத்தை கண்டு பிடிக்க முடியும். ஆனால், அது ஒரு நீண்ட கால முயற்சியாகவே இருக்க முடியும். .
வான் போக்குவரத்து துறையில் சிறந்த விளங்கக்கூடிய நிபுணர்கள் ஒன்றுக்கூடி ஓர் உறுதியான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். புதிய தேடல் நடவடிக்கையை முடக்கி விட வேண்டும். அவ்வாறு தேடும் பணியை மீண்டும் தொடங்குவார்களேயானால் அனைத்து வகையான ஆருடங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, உண்மையிலேயே MH370 விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை துல்லியமாக கண்டறிய முடியும் என்று டாக்டர் மொகமாட் ஹரிடொன் சுப்யான் கூறுகிறார்.