காரில் பெண்ணின் சடலம், பொது மக்கள் அதிர்ச்சி

ரவாங்,பிப்.8
ரவாங், லாத்தார் நெடுஞ்சாலையில் குன்டாங் பாராட், R & R வாகனமோட்டிகள் ஓய்வுத் தளத்தின் கார் நிறுத்தும் இடத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒரு காருக்குள் பெண்ணின் சடலம் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இறந்து கிடந்த பெண் 33 வயதுடைய உள்ளூர்வாசியாவார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் கடெரி அபாங் வஸ்லி தெரிவித்தார்.

நேர்த்தியான உடை அணிந்திருந்த அந்தப் பெண்மணி, காரின் ஓட்டுநர் இருக்கையில் சாய்ந்தவாறு இறந்து கிடந்தார். அவருக்கு சொந்தமானவை என்று நம்பப்படும் உடமைகள் காரில் இருந்தன என்று கடெரி குறிப்பிட்டார்.

முன் இருக்கையில் கால் வைக்கும் இடத்தில் நிலக்கரியுடன் களிமண் கலக்கப்பட்ட ஒரு பாத்திரத்தையும், எரிந்த சில பொருட்களையும் போலீசார் மீட்டனர். அவரின் உடலில் எந்தவொரு காயமும் காணப்படவில்லை. சம்பந்தப்பட்ட பெண் 24 மணி நேரத்திற்கு முன்பு இறந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக கடெரி தெரிவித்தார்.

பயணிகள் காலடியில் வைக்கப்பட்டு இருந்த எரியூட்டப்பட்ட நிலக்கரி புகையை நுகர்ந்து அந்தப் பெண் தற்கொலை செய்து இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

சவப்பரிசோதனைக்காக அவரின் உடல் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடெரி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்