ஜார்ஜ்டவுன், மே 03-
11.6 மில்லியன் வெள்ளி மதிப்பிலான தங்கும்விடுதி தொடர்பில், கையூட்டைப் பெற்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ரத்து செய்வதில்,பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், அவரது மனைவி பெட்டி செவ் கெக் செங், வர்த்தகர் பாங் லி கூன் ஆகிய மூவரும் தோல்வி கண்டுள்ளனர்.
அவ்வழக்கில், வெவ்வேறு நபர்களை உட்படுத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளில், குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி ஜார்ஜ்டவுன் உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆணையர் ரோஃபியா அம்மூவரது மனுக்களை நிராகரித்து தீர்ப்பளித்தார்.
இதுவரையில் அவ்வழக்கில் 25 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டிருந்தாலும், அவர்கள் வழங்கிய விளக்கம் அடிப்படையிலும் அல்லது விசாரணையின் வழி பெறப்பட்ட ஆதாரப்பூர்வமான உண்மைகள் குறித்தும் எந்தவொரு தகவலும் பெறப்படவில்லை.
ஆகையால், அவ்வழக்கு தொடரப்படும் என கூறிய ரோஃபியா, அவ்வழக்கின் நிர்வகிப்புக்கான தேதியாக ஜூலை மாதம் 26ஆம் தேதியை நிர்ணயித்தார்.