கோலாலம்பூர், மே 20-
கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட DAP-யைச் சேர்ந்த செப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கொக்-க்கிற்கு PAS கட்சி துணை நிற்பதாக, அதன் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ தகியுதீன் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மலேசியர் என்ற அடிப்படையில், குற்றசெயல்கள் அல்லது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளிலிருந்து, தெரேசா கொக்-க்கை தற்காப்பதற்கு, சட்ட ரீதியிலான அனைத்து பாதுகாப்புகளும், அவருக்கு வழங்கப்படுவது அவசியம் எனவும் தகியுதீன் ஹாசன் கூறினார்.
அண்மையக் காலமாக நாட்டில், அரசியல்வாதிகள், பாதுகாப்பு படையினர், விளையாட்டுத்துறையினர், வர்த்தகர்கள் முதலானோருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
தெரேசா கொக் அச்சமின்றி வாழ்வதற்கு ஏதுவாக, போலீஸ் அவருக்கு மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் கண்டு, சட்டத்திற்கு முன்பு நிறுத்த வேண்டும் எனவும் தகியுதீன் ஹாசன் வலியுறுத்தினார்.
நேற்று முந்தினம், தெரேசா கொக் வீட்டு அஞ்சல் பெட்டியில் இரண்டு தோட்டாக்களுடன் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது தொடர்பில், அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.