பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21 –
டி.ஏ.பி யைச் சேர்ந்த கோல குபுபாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹீயோங் காலமானார். அவருக்கு வயது 58. புற்று நோயினால் அவதியுற்று வந்த அந்த பெண் சட்டமன்ற உறுப்பினர், இன்று காலை 10 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.
மறைந்த லீ கீ ஹீயோங் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மூன்று தவணைக்காலம், கோலகுபுபாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு மசீச வேட்பாளர் ஓய் ஹூய் வேன்னை 1,702 வாக்குகள் வித்தியாசத்திலும், 2018 ஆம் ஆண்டு மசீச வேட்பாளர் வூன் கூன் மூன் னை 7,134 வாக்குகள் வித்தியாசத்திலும், கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட கெராக்கான் வேட்பாளர் தீயோ கீன் ஹோங் கை 4,119 வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்கடித்து மூன்று தவணைக்காலம் கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியை லீ கே ஹீயோங் தற்காத்துக்கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், லீ கீ ஹீயோங் கின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்கு ஏதுவாக அவர், சிலாங்கூர் சட்டமன்றக்கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து மருத்துவ விடுப்பில் சென்றார். கடந்த வாரம் மார்ச் 16 ஆம் தேதி லீ கீ ஹீயோங் , தமது 58 ஆவது பிறந்த நாளை கொண்டாடியதாக தெரிவிக்கப்பட்டது.
லீ கீ ஹீயோங் – கின் மறைவு பல்வேறு தரப்பினருக்கு குறிப்பாக கோலகுபுபாரு தொகுதி மக்களுக்கு பேரிழப்பாகும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில ஒற்றுமை அரசாங்கம் சார்பில்லீ கீ ஹீயோங் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.