ரெம்பாவ், ஏப்ரல் 20-
கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு மறுத்து இருக்கும் மசீச மற்றும் மஇகாவின் நடவடிக்கைக்கு எதிராக பாரிசான் நேஷனல் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசன் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பாரிசான் நேஷனல் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படாததால் தாங்கள் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று உறுப்புக்கட்சிகளாக விளங்கும் மசீசவும், மஇகாவும் கூறுவது ஏற்புடையது அல்ல.
நடைபெறவிருக்கும் தேர்தல் பொதுத் தேர்தல் அல்ல, தொகுதிகளை மாற்றிக்கொள்வதற்கு என்பதையும் அவ்விரு கட்சிகளுக்கும் அம்னோ துணைத் தலைவருமான முகமட் ஹாசன் உணர்த்தினார்.
கோலகுபுபாரு சட்டமன்றம், ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள பக்காத்தான் ஹராப்பானின் டிஏபி வசம் உள்ள ஒரு தொகுதியாகும். நடைபெறவிருப்பது இடைத் தேர்தலாகும்.எனவே அந்த தொகுதியை கோரும் விவகாரத்தில் பாரிசான் நேஷனல் சர்ச்சை செய்ய முடியாது.
எனவே ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள ஒரு கூட்டணி கட்சி என்ற முறையில் பாரிசான் நேஷனல் உறுப்புக்கட்சிகள் தங்களின் ஆதரவை பக்காத்தான் ஹராப்பானுக்கு நல்குவது தார்மீக கடப்பாடாகும் என்பதையும் முகமட் ஹாசன் விளக்கினார்.