கோலாலம்பூர், ஏப்ரல் 26-
கோலாலம்பூர், கம்போங் பாத்து-வில் மேற்கொள்ளப்பட்ட Ops Pemandu Warga Asing (Pewa) திடீர் சோதனையில் முறையான ஓட்டுநர் உரிமமின்றி சட்டவிரோதமாக வாகனங்களை பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் மேற்கொண்ட அச்சோதனையில் சில வெளிநாட்டு பிரஜைகள் ரொட்டி மற்றும் பனிக்கூழ் விற்பனை உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக உள்ளூர்வாசிகளின் பெயர்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்கள் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமமின்றி மோட்டார் சைக்கிளில் வியாபாரம் செய்யும் பழைய உலோக சேகரிப்பாளரான 37 வயது மியன்மார் பிரஜை ஒருவரை கோலாலம்பூர் சாலை போக்குவரத்து துறையினர் கைது செய்தனர்.
மேலும், 58 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு லாரிகள், இரண்டு கார்கள் என மொத்தம் 62 வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணத்தினால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் 422 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டதாகவும் கோலாலம்பூர், சாலை போக்குவரத்து துறையின் துணை இயக்குநர் எரிக் ஜூசியாங் கூறினார்.