புத்ராஜெயா, பிப்ரவ்ரி 28 –
- நாடு திரும்புகின்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது
*வெறும் 500 வெள்ளி அபராதம் மட்டுமே விதிக்கப்படும்
- டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம்
- மலேசிய குடிநுழைவுத்துறை அறிவிப்பு
மலேசியாவில் செல்லத்தக்க பயண ஆவணமின்றி இருக்கும் வெளிநாட்டவர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட நாட்களை விட கூடுதலாக தங்கிவிட்டவர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்பும் திட்டத்தை மலேசிய குடிநுழைவுத்துறை நாளை மறுநாள் மார்ச் முதல் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
பயண ஆவமின்றி இருப்பவர்கள், இத்திட்டத்தின் மூலம் தாயாகம் திரும்பும் போது அவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. மாறாக, வெறும் 500 வெள்ளி அபராதத் தொகையை மட்டும் செலுத்தி விட்டு, தங்கள் தாயகத்திற்கு திரும்பலாம் என்று மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ரூஸ்லின் ஜுசோ அறிவித்துள்ளார்.
தங்களின் பயண ஆவணங்கள் அல்லது வேலை பெர்மிட் நிபந்தனைகளை மீறியவர்கள், வெறும் 300 வெள்ளியை அபராதமாக செலுத்தினால் போதுமானதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மன்னிப்பு தன்மையிலான இந்த புதிய திட்டத்தில் நாடு திரும்ப விரும்பும் சட்டவிரோத குடியேறிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. அவர்கள் 500 வெள்ளியை அபராதத் தொகையாக செலுத்தினால் எவ்வித நடவடிக்கையுமின்றி தங்களின் தாயத்திற்கு நிம்மதியாக சென்றடைய முடியும் என்று ரூஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
சட்டவிரோதக்குடியேறிகள் நாடு திரும்பும் இத்திட்டம், வரும் மார்ச் முதல் தேதி தொடங்கி இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என்று ரூஸ்லின் ஜுசோ விளக்கினார்.
அதேவேளையில் சட்டவிரோதக் குடியேறிகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் இத்திட்டத்தில் மலேசிய குடிநுழைவுத்துறை எந்தவொரு ஏஜெண்டையோ அல்லது இடைத் தரகரையோ நியமிக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கான அலவல்களை நேரடியாக மலேசிய குடிநுழைவுத்துறையுடன் மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்று ரூஸ்லின் ஜுசோ அறிவுறுத்தினார்.