நாட்டின் 17 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு சிங்கப்பூரை போன்று மலேசியா ஆகி விடும் என்று தாம் மிகவும் பயப்படுவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று அச்சம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரைப் போன்று நாட்டின் பொருளாதாரத்தில் மலாய்க்காரர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதுடன் தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்த ஒரு சமூகமாகி விடுவார்களோ என்ற பயம் தம்மை கவ்விக்கொண்டு இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம், மலாய்க்கார்கள் பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகளை உடைத்து, மலாய்க்கார்களின் எண்ணிக்கையை குறைத்து, மலாய்க்காரரர் அல்லாதவர்களை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தொகுதிகள் உடைக்கப்பட்டால் நாட்டின் அரசியல் நில வடிவமைப்பு மாறக்கூடும். நடப்பு அரசாங்கம், இந்த சூழலை ஏற்படுத்தலாம். இதன் தாக்கம் வருகின்ற 16 ஆவது பொதுத் தேர்தலில் உணர முடியும் என்பதுடன் 17 ஆவது பொதுத் தேர்தலில் நிலைமை மோசமாகி விடும் என்று மலாய்க்காரர்களுக்கு துன் மகாதீர் நினைவுறுத்தினார்.
இத்தகைய அரசியல் போக்கு, எதிர்காலத்தில் ஒரு மலாய்க்காரர்தான் நாட்டின் பிரதமராக வர முடியும், வர வேண்டும் என்பதற்கு உத்தரவாதம் இருக்காது என்று துன் மகாதீர் எச்சரித்தார். மலாய்க்காரர்கள் பிளவுப்பட்டு, மூன்று வெவ்வேறு கட்சிகளாக சிதறுண்டு கிடந்தால் மலேசியாவில் இதுதான் நடக்கப் போகிறது என்று துன் மகாதீர் நினைவுறுத்தினார்.
இன்று புத்ராஜெயாவில் பிரதம தலைமைத்துவ அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் துன் மகாதீர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். .