சிலாங்கூர், ஏப்ரல் 26-
வரும் மே 11 ஆம் தேதி கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் பட்சத்தில் அந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை ஏப்ரல் 27 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ஹரி ராயா பொது உபசரிப்பை கோலகுபு பாரு தொகுதியில் நாளை சனிக்கிழமை மாலையில் நடத்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசு முனைந்திருப்பது, 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தை மீறிய செயலாகும் என்று தேர்தல் சீர்திருத்த அமைப்பான Bersih கண்டனம் தெரிவித்துள்ளது.
இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்ற பின்னர் எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது அந்த கட்சியை பிரதிநிதிக்கின்ற ஸ்தாபனமும் கையூட்டுத் தன்மையிலான பொருள் அன்பளிப்போ அல்லது விருந்து உபசரிப்போ நடத்தக்கூடாது என்பது தேர்தல் சட்ட விதியின் முக்கிய நிபந்தனையாகும்.
ஓர் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில், அந்த இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளரை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய கட்சியோ அல்லது அமைப்போ பிரச்சார தன்மையிலான நடவடிக்கையை தவிர்த்து வாக்காளர்களை கவர்வதற்கு விருந்து உபசரிப்பு நடத்தக்கூடாது.
நிலைமை இவ்வாறு இருக்க சிலாங்கூர் மாநில அரசின் ஹரிராயா பொது உபசரிப்பை தேர்தல் நடக்கும் கோலகுபு பாரு தொகுதிக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையமான SPR என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பெர்சே பொறுத்திருந்து பார்க்கப்போவதாக அந்த தேர்தல் சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.