ஷாஹ் அலாம், ஏப்ரல் 26-
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் தனது தேர்தல் கேந்திரத்தின் முழு பலத்தையும் பயன்படுத்த முனைந்துள்ள பெரிக்காத்தான் நேஷனல், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை கவர முடியாது என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜெய்த் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இந்த இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் முதிர்ச்சி தன்மையுடன் நடந்த கொள்ள வேண்டும் என்பதுடன் உணர்ச்சிரமான விவகாரங்களை தூண்டிவிடும் போக்கை தவிர்க்க வேண்டும் என்று PKR மற்றும் DAP ஆகிய கட்சிகளின் முன்னாள் உறுப்பினரான ஜெய்த் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
ஆட்சி அமைப்பதற்குரிய ஒரு கட்சியாக பார்க்கப்பட வேண்டுமானால் பெரிக்காத்தான் நேஷனல் தனது செயல்பாட்டில் அதிக நிதானத்தை கடைப்பிடித்து, ஒரு பொறுப்புள்ள கட்சியாக காட்டிக்கொள்ள முனைய வேண்டும்.
ஆனால், பெரிக்காத்தான் நேஷனலைப் பொறுத்தவரையில் அவ்வாறு நடந்து கொள்ள இயலாது என்பது ஒரு பெரும் பிரச்னையாக இருப்பதால் அவர்களால் மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளை பெரியளவில் கவர முடியாது என்று கோத்தா பாரு முன்னாள் எம்.பி.யுமான ஜெய்த் இப்ராஹிம் குறிப்பிட்டார்.