சுபாங் ஜெயா, மார்ச் 30-
சுபாங் ஜெயா, பெர்சியாறன் ஹர்மோனி, புத்ரா ஹெயிட்ஸ்- ஸில் நேற்றிரவு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து இளைஞர்கள், கிள்ளான் பள்ளத்தாக்கில் குறைந்த பட்சம் 50 க்கும் மேற்பட்ட துப்பாக்கி மற்றும் வெட்டுக்கத்தி தாங்கிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று போலீசார் நம்புகின்றனர்.
தொழிற்சாலைகளுக்கு சம்பளப் பணத்தை எடுத்துச் செல்லும் வாகனங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் ஆகியவற்றை இலக்காக கொண்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கும்பல், கொள்ளைச் சம்பவங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளதாக நம்பப்படுகிறது.
ஷா ஆலம், பூச்சோங், கிள்ளான், சுபாங் ஜெயா, காஜாங், செந்தூல் முதலிய பகுதிகளில் இக்கும்பல் கொள்ளையிட்டு வந்ததற்கான 50 க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்தியர்கள் என்று நம்பப்படும் 25 க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஐந்து நபர்களும் நேற்று இரவு 11.30 மணியளவில் புத்ரா ஹெயிட்ஸ்- ஸில் பெரோடுவா அக்சியா காரில் சென்று கொண்டிருந்த போது, போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐவரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக சிலாங்கூர் மாநில போலீசார் டத்தோ ஹுசைன் ஓமர் கான் இன்று நண்பகலில் செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் செய்தியாளர்கள் கூட்டம் தொடர்பில் மாலை 4.20 மணி வரையில் எந்தவொரு தகவலும் இல்லை.