அரச மலேசிய போலீஸ் படை, தனது 42 உயர் அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் ஜோகூர் மாநிலத்தின் புதிய போலீஸ் தலைவராக கமிஷனர் அந்தஸ்தில் எம்.குமார் முத்துவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோகூர் மாநில போலீஸ் படையின் துணைத் தலைவராக பொறுப்பில் இருக்கும் துணை கமிஷனர் குமாரின் பதவி காலம், வரும் ஜனவரி 23 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
கடந்த 39 ஆண்டுகளில் ஒரு மாநிலத்தின் போலீஸ் தலைவராக ஓர் இந்தியர் நியமிக்கப்படுவது இது நான்காவது முறையாகும். 1977 அம் ஆம் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவராக டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ பி. அழகேந்திரா , 2017 ஆம் ஆண்டு பினாங்கு மாநில போலீஸ் தலைவராக டத்தோஸ்ரீ தைவீகன் ஆறுமுகன், 2019 ஆம் ஆண்டு பினாங்கு மாநில போலீஸ் தலைவராக டத்தோ தி. நரேனா சேகரன் தங்கவேலு ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜோகூர் மாநில போலீஸ் படைக்கு மேலும் ஓர் இந்தியர் பொறுப்பேற்கவிருக்கிறார்.
மாநில போலீஸ் துறைக்கு தலைமையேற்ற இந்தியர்களில் டான்ஸ்ரீ அழகேந்திரா பொன்னுதுரை மட்டுமே 7 ஆண்டுகள் ஒரு மாநிலத்திற்கு தலைமையேற்று இருந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்ட டான்ஸ்ரீ அழகேந்திரா. 1984 ஆண்டில் பணி ஓய்வுப்பெறும் வரையில் அப்பொறுப்பில் வீற்றிருந்தார்.
டத்தோஸ்ரீ தெய்வீகன் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவராக பொறுப்பேற்று 2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பணி ஓய்வுப்பெற்றார்.
போலீஸ் படையில் மாநில அளவில் உயரிய பதவிகளை வகிக்கும் இதர உயர் அதிகாரிகளில் டத்தோ சசிகலா தேவி சுப்ரமணியம் ஒருவர் ஆவார்.கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி டத்தோ சசிகலா தேவி, சிலாங்கூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவராக பதவியேற்றார்.
அன்றைய சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமது- பதவி ஓய்வுப்பெற்றதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில போலிஸ் படைக்கு தலைமையேற்ற டத்தோ சசிகலாதேவி, சிலாங்கூர் மாநில புதிய போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் பதவியேற்றப் பின்னர் டத்தோ சசிகலா தேவி மாநிலத்தின் துணை போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.