தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவற்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ள வேளையில் தமிழ்ப்பள்ளிகளுக்கான விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை கல்வி அமைச்சு இதுவரை வெளியிடாதது பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தீபாவளி விடுமுறை வழங்கப்படுவதில் மாறுப்பட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதால் இதற்கு கல்வி அமைச்சு மட்டுமே தெளிவான விளக்கத்தை அளிக்க முடியும் என்று பெற்றோர்கள் பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதர பெருநாட்களுக்கு விடுமுறை வழங்குவதிலும், அதற்கு கூடுதல் நாட்கள் ஒதுக்குவதிலும் , பள்ளி தவணை விடுமுறையை பெருநாள் காலத்தில் ஒதுக்கி தருவதிலும் மிகத்தெளிவாக இருக்கும் அமைச்சர் ஃபட்லினா சிடெக் தலைமையிலான கல்வி அமைச்சு, தீபாவளி திருநாளுக்கு மட்டும் இழுத்தடிப்பு போக்கை கடைப்பிடிப்பது ஏன் என்று பெற்றோர்கள் பலர் ஊடகங்களின் வாயிலாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். .
மாநில கல்வி இலாகாவின் விவேகத்திற்கு உட்பட்ட தீபாவளி விடுமுறை எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுவதால் சில பள்ளிகளுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறையும், இன்னும் சில பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறையும் என மாறுபட்டு உள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு தெளிவான வழிகாட்டலை இன்னும் வெளியிடாததால் இந்த குழப்பங்கள் நிலவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று அவர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
தீபாவளியையொட்டி தமிழ்ப்பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு அறிவிக்கும் விடுமுறை நாட்களைப் பொறுத்தே பெற்றோர்களும் தங்கள் விடுமுறையை திட்டமிட முடியும் என்பதால் இது குறித்து கல்வி அமைச்சு விரைந்து ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.