கோலாலம்பூர், ஏப்ரல் 15-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் – KLIA டெர்மினல் ஒன்றில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகிக்கும் நபரின் புகைப்படம், நாட்டிலுள்ள அனைத்து நுழையங்களிலும், அண்டை நாட்டு அமலாக்க தரப்புகளிடமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் 38 வயது ஹபிசூல் ஹராவி என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த உத்தரவு வெளியிடப்பட்டதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.
அந்நபர் இன்னமும் நாட்டினுள் பதுங்கியிருப்பதாக எதிர்பார்க்கப்படும் சூழலில், அவர் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமான வழிகளில் தப்பித்துச்செல்வதை தடுக்க, நாட்டின் எல்லைப் பகுதிகளிலுள்ள சாலைகள் உட்பட அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் அந்த நபரை போலீஸ் கைது செய்யும் எனவும் ரசாருதீன் ஹுசைன் கூறினார். நேற்று நள்ளிரவு மணி 1.30க்கு சம்பவ இடத்தில் அவ்வாடவர் தனது மனைவியை நோக்கி இருமுறை சுட்டத்தில், அவரது பாதுகாவலரான உள்நாட்டு ஆடவர் கடும் காயங்களுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.