கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பினாங்கு மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையில் இருந்து வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் Aaron Ago Dagang நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பினாங்கு இந்து அறப்பணி வாரியம், தமது தலைமையிலான தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தார்.
பினாங்கு அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் கீழ் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. காரணம், இது குறித்து பினாங்கு மாநில அரசாங்கத்துடன் மத்திய அரசாங்கம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று இன்று பினாங்கு பத்துகாவானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சௌ கோன் இயோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
1906 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியம், சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பினாங்கு மாநில அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. பினாங்கு வாழ், இந்துக்களின் நலன் காக்கும் ஓர் அறங்காப்பகமாக செயல்பட்டு வரும் இந்து அறப்பணி வாரியத்தை திடீரென்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட வேண்டிய அவசியம் என்ன? இது தொடர்பாக பினாங்கு மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமான விளக்கத்தை கோரும் என்று முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.