ஷாஹ் அலாம், ஏப்ரல் 24-
விமான சேவையை பயன்படுத்தி சரவாக்கிற்கு போதைப்பொருள்களை கடத்த முயற்சித்த இரண்டு கட்டுமான தொழிலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை, அதிகாலை 4.11 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பெட்டிகளை சோதனையிட்டபோது 29 மற்றும் 44 வயதுடைய அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் துணைத்தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி தெரிவித்தார்.
சந்தேகிக்கும் அந்நபர்களின் பயணப் பெட்டியை சோதனையிட்ட போது 1.76 மில்லியன் வெள்ளி மதிப்பிலான methamphetamine என்கிற 7,000 கிராம் போதைப்பொருள், 5,960 கிராம் erimin 5 மாத்திரைகள் உட்பட 61 கிராம் ekstasi ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாக சசிகலா தேவி குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மீது ஏற்கனவே நான்கு குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்த வேளை, சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாக சசிகலா தேவி விவரித்தார்.
அந்நபர்கள் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி வரையில் ஏழு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் அறிவித்தார்.