பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்களுக்கு உணவு மற்றும் குளிர்பானம் வழங்கியதாக போலியான கணக்கை காட்டி, 13 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட கூட்டு மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் பள்ளி தலைமையாசிரியர் , நிர்வாகப் பணியாளர் மற்றும் நிறுவனம் ஒன்றின் இரண்டு அதிகாரிகள் என நால்வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.
திரெங்கானு மாநிலத்தில் உள்ள தங்கும் வசதியை கொண்ட ஒரு தொடக்கப்பள்ளியில் நிகழ்ந்தாக கூறப்படும் இச்சம்பவத்தில் , கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை கணக்கு அறிக்கை காட்டப்பட்டுள்ளது. உணவு மற்றும் பானம் விநியோகிக்கப்பட்டதைப் போன்று போலி ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, இந்தப் பணக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
35 மாணவர்களுக்கான உணவு விநியோகிப்பில் 100 மாணவர்கள் என்று எழுதப்பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் வட்டாரங்கள் தெரிவித்தன.