மலாக்கா, ஏப்ரல் 11-
மலாக்கா, அலோர் காஜா, ஜாலான் கங்சா-கெசாங் டுரியான் துங்கால்-லில் சட்டவிரோத பந்தயத்தை முறியடிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தை மோதிய 18 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார். நேற்று அதிகாலை மணி 2.56 அளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
போலீஸ் வாகனத்தை மோதி பல மீட்டர் தூரத்தில் தூக்கியெறியப்பட்ட முஹம்மத் கயிருள் பசாஹ்ரி கீழே விழுந்ததில், உடம்பில் பல பகுதிகளில் பலத்த காயத்திற்கு இலக்கானார். பிறகு, மலாக்கா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட இளைஞரை போலீஸ் அவரது வாகனத்தில் வேண்டுமென்றே மோதியதைப் போன்று வெளியான காணொளி குறித்து பொதுமக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
37 வயதுடைய ரோந்து போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் கும்பல், அதிக இரைச்சலை ஏற்படுத்தி தொந்தரவை வழங்குவதாக, பொதுமக்கள் வழங்கிய புகாரின் அடிப்படையிலேயே அவர் அவ்விடத்திற்கு சென்றதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ சய்னோல் சமாஹ் கூறினார்.
இருப்பினும், அந்த விபத்து குறித்து நியாயமானதாகவும் வெளிப்படையாகவும் விசாரணை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்த சய்னோல் சமாஹ், அது தொடர்பில் தகவலறிந்தவர்கள் போலீசிடம் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.