பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு சவாரியும் செய்ய முடியாமல், ஊனமுற்ற குதிரைகளாக இருப்பதை விட டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ஓர் உறுப்புக்கட்சியாக இணைந்து, பந்தயக் குதிரைகளாக மாற வேண்டும் என்று மஇகாவிற்கும், மசீச.விற்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை அவ்விரு கட்சிகளும் நிராகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவதால் அவ்விரு கட்சிகளுக்கும் எந்தவொரு நன்மையும் கிட்டப் போவதில்லை என்று அரசியல் ஆய்வாளரும், மலேசிய பேராசியரிர் மன்றத்தின் பொறுப்பாளருமான பேராசிரியர் Jeniri Amir ஆலோசனை கூறியுள்ளார்.
மலாய்க்காரர்களை தளமாக கொண்டுள்ள பெரிக்காத்தான் நேஷனலில், இனவாரியான வாக்காளர்களை கொண்டுள்ள மசீச.வும், மஇகாவும் பெரிதாக சாதிக்கப் போவது எதுவுமில்லை.
முஸ்லிம் அல்லாத வாக்காளர்களை ஒரு பொருட்டாக மதிக்காத பாஸ் கட்சி அங்கத்துவம் பெற்றுள்ள, பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியாக மசீச.வும், மஇகாவும் இணையுமானால் அது அக்கரைப் பச்சைதான் என்ற ஓர் உண்மையை அவ்விரு கட்சிகளும் உணர வேண்டும் என்று பேராசிரியர் Jeniri Amir அறிவுறுத்தினார்.