பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழு வீச்சில் எதிர்க்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது தலைமையில் மலாய்க்காரர்கள் மீதான பிரகடனத்தை அறிவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மாநாட்டை ரத்து செய்துள்ள அன்வாரை, மலாய்க்காரர்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று 97 வயதான துன் மகாதீர் அறைகூவல் விடுத்துள்ளார்.
மலாய்க்காரர்கள் நலன் சார்ந்த விவகாரங்களை பேசுவதற்கு நாட்டின் அரசிலமைப்புச் சட்டத்திலும், அம்னோ சட்ட விதிகளிலும் இடம் அளிக்கப்பட்ட வேளையில் அந்த மாநாட்டை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக மாறிய அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்று துன் மகாதீர் கேட்டுக்கொண்டார்.
அம்னோ, இனியும் மலாய்க்காரர்களுக்காக போராடக்கூடிய கட்சி அல்ல. எனவேதான் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்கள் நலனை பாதுகாப்பதற்கு மற்றத் தரப்பினர் போராட வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.