மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை காதலித்து கரம்பிடித்தார் அபர்ணா தாஸ்

இந்தியா, ஏப்ரல் 24-

டாடா, பீஸ்ட் போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை அபர்ணா தாஸ், மலையாள நடிகர் தீபம் பரம்போலை இன்று திருமணம் செய்துகொண்டார்.

சினிமாவில் ரீல் ஜோடிகளாக நடிப்பவர்கள் காதலித்து ரியல் ஜோடிகளாக மாறிய சம்பவம் பல்வேறு திரையுலகில் அரங்கேறி இருக்கிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சூர்யா – ஜோதிகா, சினேகா – பிரசன்னா, ஆதி – நிக்கி கல்ராணி, மஞ்சிமா மோகன் – கவுதம் கார்த்திக் என ஏராளமான நடிகர், நடிகைகள் ரீல் ஜோடிகளாக நடித்த பின்னர் ரியல் ஜோடிகளாக மாறினர். அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர்கள் தான் அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல் ஜோடி.

இவர்கள் இருவருமே மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர், நடிகை ஆவர். இதில் அபர்ணா தாஸ் தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்தது மட்டுமின்றி கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன டாடா படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகி இருந்தார். அதேபோல் நடிகர் தீபக் பரம்போல் சமீபத்தில் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் என்கிற மலையாள படத்தில் நடித்தவர் ஆவார்.

இவர்கள் இருவரும் மனோகரம் என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, அந்த காதல் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. தீபக் பரம்போல் – அபர்ணா தாஸ் ஜோடியின் திருமணம் இன்று கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல் ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. முன்னதாக இவர்களது ஹல்தி மற்றும் சங்கீத் பங்க்‌ஷன் கிராண்ட ஆக நடைபெற்றது. நாளை கொச்சியில் அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்