தமது வீட்டிலும், அலுவலகத்திலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுவதை மனித வள அமைச்சர் வி. சிவகுமார் இன்று மறுத்துள்ளார்.
பத்துகாஜா எம்.பி.யுமான அமைச்சர் சிவகுமார் இல்லத்திலும் அலுவலகத்திலும் எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் அலசி ஆராய்ந்து சில கோப்புகளை எடுத்துள்ளனர் என்று அகப்பக்க செய்தி தளங்கள் கூறுகின்றன. எனினும் இன்று திங்கட்கிழமை காலையில் புத்ராஜெயாவில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகுமார், அந்தக் கூற்றை முற்றாக மறுத்த்தார். “இல்லை….இல்லை…இல்லை….அப்படியொரு அலசல் நடவடிக்கையில் எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் ஈடுபடவில்லை” என்று சிவகுமார் தெளிவுபடுத்தினார்.
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனம் சம்பந்தப்பட்ட 9 கோடியே 70 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் தமது இரண்டு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது தொடர்பில், அமைச்சர் சிவகுமாரிடம் அந்த ஆணையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தியுள்ளது.
அந்த விசாரணைக்குப் பிறகு சிவகுமார் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்தத் தகவலில் உண்மையில்லை என்று அமைச்சர் சிவகுமார் விளக்கினார்.