முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் 12 ஆண்டு சிறைத் தண்டனையை 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கும் மன்னிப்பு வாரியத்தின் முடிவை சிறுமைப்படுத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படும் DAP- யைச் சேர்ந்த முன்னாள் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் Tony Pua, நாளை திங்கட்கிழமை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அரச பரிபாலனத்தை அவமதிக்கும் வகையில் டோனி புவா அறிக்கை வெளியிட்டது தொடர்பில் அதிகமான போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.
பொது மன்னிப்பு வாரியத்திடம் நஜீப் செய்து கொண்ட விண்ணப்பத்தை தொடர்ந்து அவருக்கான தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதுடன் 21 கோடி வெள்ளி அபராதத் தொகை 5 கோடி வெள்ளியாக குறைக்கப்பட்டுள்ளது.
நஜீப் அந்த 5 கோடி வெள்ளி அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் தமது முகநூலில் அறிக்கை வெளியிட்ட டோனி புவா, யாராவது தம்மை ஓராண்டுக்கு சிறைக்கு அனுப்ப முடியுமா? அதற்கு கைமாறாக தனக்கு 5 கோடி வெள்ளி கொடுத்தால் போதும் என்று பொது மன்னிப்பு வாரியத்தின் முடிவை சிறுமைப்படுத்தும் தன்மையில் கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.