நாட்டில் மலாய்க்காரர் ஒருவர்தான், பிரதமராக வருவார் என்பதற்கு இனியும் உத்தரவாதம் இல்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல் வடிவமைப்பு மாற்றம் கண்டு வருவதால், மலாய்க்காரர் பிரதமராக வர முடியும் என்பதை உறுதியாக கூற இயலாது என்று முகைதீன் குறிப்பிட்டார்.
ஓர் அரசாங்கத்தை நிறுவுவதற்கு மக்களவையில் எந்தவொரு கட்சிக்கும் போதுமான பெரும்பான்மை கிடைக்காமல் போன 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு நாட்டில் அரசியல் வடிவமைப்பில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது.
பிரதமரை தேர்வு செய்வதற்குகூட பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் விரும்பிய ஒருவரை பிரதமராக தேர்வு செய்வதற்குகூட வாய்ப்பில்லை. காரணம், கட்சி எடுக்கக்கூடிய முடிவுக்குதான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பட்டாக வேண்டும். அந்த அளவிற்கு கட்சித் தாவல் தடை சட்டம் அவர்களை அழுத்தத் தொடங்கி விட்டதாக முன்னாள் பிரதமரான முகைதீன் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மலாய்க்காரர் அல்லாத ஒருவரை பிரதமராக்க வேண்டும் என்று கட்சி முடிவு எடுக்குமானால் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டுப்பட்டாக வேண்டும் என்ற நிலை உருவாகி விட்டதாக முகைதீன் தெரிவித்தார்.