சபா, ஏப்ரல் 25-
சபா, பாப்பரில் அடைமழையின் காரணமாக கூடாரத்தினுள் ஒதுங்கிய மோட்டார்சைக்கிளோட்டியை, டொயோட்டா ஹாரியர் ரக வாகனம் ஒன்று மோதி தள்ளியது.
நேற்று மாலை மணி 3.30 அளவில் ஜாலான் பான் போர்னியோ சாலையின் 20ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அந்த விபத்தில், 48 வயதுடைய மோட்டார்சைக்கிளோட்டியான ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடக்கக்கட்ட விசாரணையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த டொயோட்டா ஹாரியர் ரக வாகன ஓட்டுநர், சாலையின் இடதுபுறத்திலிருந்த கூடாரத்தை மோதியது தெரிய வந்திருப்பதாக, பாப்பர் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் கமாருதீன் அம்போ சக்கா கூறினார்.
உடல் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.