அண்டை நாடான சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கும், பேரரசியார் ராஜா ஜரித் சோபியா-விற்கும் அக்குடியரசு இன்று மகத்தான வரவேற்பை நல்கியது.
காலை 10.45 மணியளவில் சிங்கப்பூரை சென்றடைந்த மாமன்னரையும், பேரரசியாரையும் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னமும், அவரின் துணைவியார் ஜேன் இட்டோகியும் வரவேற்றனர்.
இவ்வருகையின் போது மாமன்னருடன் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் அஸ்பர் முகமது முஸ்தபர் காணப்பட்டனர்.
இந்த வரவேற்பு நிகழ்விற்கு பின்னர் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், சிங்கப்பூர் அமைச்சர்களான வெளிறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழிலியல் அமைச்சர் கன் கிம் யோங் மற்றும் சமூக, குடும்ப மேம்பாட்டுத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார்.
முன்னதாக, சிங்கப்பூர் இஸ்தானாவில் நடைபெற்ற மரியாதை அணிவகுப்பை மாமன்னர் பார்வையிட்டார்.
நாட்டின் 17 ஆவது மாமன்னராக கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பொறுப்பேற்றதிலிருந்து சுல்தான் இப்ராஹிம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.