பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 –
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் சம்பந்தப்பட்ட 23 கோடியே 25 லட்சம் வெள்ளி தொடர்பான 4 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்படவிருக்கும் மேல்முறையீட்டிற்கு பிராசிகியூஷன் தரப்பு இன்று பூர்வாங்க ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவரான முகைதீனுக்கு எதிரான வழக்கு மீண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் என்று அப்பீல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஏற்ப இவ்வழக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் இன்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் வான் ஷாஹாருடின் வான் லாடின் இந்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இவ்வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, பின்னர் அப்பீல் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது மூலம், இவ்விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாக வான் ஷாஹாருடின் குறிப்பிட்டார்.
இந்த மேல்முறையீட்டை விசாரணை செய்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் எந்தவொரு அதிகாரத்தையும் கொண்ருக்கவில்லை என்று வான் ஷாஹாருடின் சுட்டிக்காட்டினார்.
முகைதீன் யாசினை நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்வதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கடந்த வாரம் அப்பீல் நீதிமன்றம் ரத்து செய்ததுடன், அந்த வழக்கு மீண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.