முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மீது மற்றொரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, ஷா ஆலம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. Jana Wibawa திட்டம் தொடர்பில் Bukhary Equity Sdn. Bhd என்ற நிறுவனத்திடமிருந்து 50 லட்சம் வெள்ளியை சட்டவிரோதமாக பெற்றதாக 76 வயதான முகைதீன் குற்றஞ்சாட்டப்பட்டார்.
லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 6 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவருமான முகைதீன், இக்குற்றத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி Petaling Jaya, Jalan Persiaran Barat, Amcorp பேரங்காடியில் உள்ள AmBank வங்கியில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பெறப்பட் லஞ்சத் தொகைக்கு நிகராக 5 மடங்கு அபராதத் தொகை விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோத பண மற்ற சட்டத்தின் கீழ் Pagoh எம்.பி.யுமான முகைதீன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Rozilah Salleh முன்னிலையில் நிறுத்தப்பட்ட முகைதீன், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். இதனை தொடர்ந்து ஏற்கனவே கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 6 குற்றச்சாட்டுகளுக்காக 20 லட்சம் வெள்ளி ஜாமீன் அனுமதிக்கப்பட்டுள்ள முகைதீன், அந்த பிணை உறுதியை பயன்படுத்தி, அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி Rozilah Salleh அனுமதி அளித்தார்.
அதேவேளையில் இவ்வழக்கை கோலாலம்பூரில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கும் நீதிபதி Rozilah Salleh இணக்கம் தெரிவித்துள்ளார். முகைதீன் நீதிமன்றத்திற்கு வந்த போது அவரது ஆதரவாளர்கள் பெரியளவில் திரண்டு, தங்களின் பிளவுப்படாத ஆதரவை அந்த பெர்சத்து கட்சித் தலைவருக்கு தெரிவித்துக்கொண்டனர்.