கோலாலம்பூர், ஏப்ரல் 22-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் – KLIA டெர்மினல் 1-இல் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு இலக்காகியிருந்த 38 வயது முஹம்மது நூர் ஹடித் ஜைனி என்கிற மெய்க்காப்பாளர் சுயநினைவுக்கு திரும்பினார்.
சைபர்ஜெயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சுயநினைவு திரும்பிய நிலையில், அவருக்கு, பொறுத்தப்பட்டிருந்த சுவாச உதவிக் கருவி நேற்று காலையில் அகற்றப்பட்டது.
தற்போது, அவர் கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கியிருப்பதாக, அவரது மனைவியான 38 வயது சித்தி நோரைடா ஹாசன் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சம்பந்தப்பட்ட விமான நிலையத்தில், பின்னிரவு மணி 1.30 அளவில் ஆடவர் ஒருவர் அவரது மனைவியை நோக்கி, துப்பாக்கியால் சுட்டதில், அவருக்கு பாதுகாப்பு வழங்கிய நூர் ஹடித் காயத்திற்கு இலக்காகியிருந்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் தலைமறைவாகியதை அடுத்து, கைது வேட்டையை தொடங்கிய போலீஸ், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, கிளந்தான், கோத்தா பாருவில் அவரை கைது செய்தது.
சம்பந்தப்பட்ட ஆடவருக்கு எதிராக, 1971ஆம் ஆண்டு சுடும் சட்டம் மற்றும் 1960ஆம் ஆண்டு ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.